புதுடெல்லி: ராம்லீலா நிகழ்ச்சியில் கங்கனா பங்கேற்றது குறித்து சுப்ரமணியன் சுவாமியின் வெளியிட்ட பிகினி ஆடை புகைப்பட பதிவால் மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் லவ் குஷ் ராம்லீலா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். ராம் லீலாவின் கடைசி நாள் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டது குறித்து, பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். அதுவும் பிகினி உடையில் மற்றொருவர் பதிவிட்டிருந்த புகைப்படத்துடன் கூடிய பதிவை ‘டேக்’ செய்துள்ளார். மேலும் ராம் லீலா நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டது குறித்து, அநாகரிகமான செயல் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கங்கனா வெளியிட்ட பதிவில், ‘பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், மோசமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளீர்கள். நீங்கள் அரசியலில் இடம் பெறுவதற்கு, என்னுடைய உடலைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு தெரியவில்லையா? நான் ஒரு சினிமா கலைஞர், நிறைய இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளேன். எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், புரட்சிகர கருத்தை தெரிவிப்பவர் பல பரிமாணங்களில் செயல்படுகிறேன். என்னுடைய இடத்தில் ஒரு இளைஞன் இருந்தால், அவர் எதிர்காலத்தில் சிறந்த தலைவராகவும், சிறந்த ஆலோசனைகளை வழங்க தகுதியானவராகவும் உருவாக முடியும்.
அப்படியென்றால் அவர் அரசியலுக்கு வருவதற்காக தனது உடலை விற்கிறார் என்று கூறமுடியுமா? உங்களிடம் ஆழமாக வேரூன்றி இருக்கும் பாலின பாகுபாடும், பெண்ணின் உடல் மீதான காமமும் உங்களை மோசமான நபராக ஆக்குகிறது. பெண்கள் உடலுறவுக்காக மட்டும் அல்ல, அவர்களின் மூளை, இதயம், கைகள், கால்கள் போன்ற எல்லா உறுப்புகளும் ஆணுக்கு இருப்பது போன்றே உள்ளன’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
The post ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரம்; பெண்கள் உடலுறவுக்காக மட்டும் அல்ல… சுப்ரமணியன் சுவாமிக்கு நடிகை கங்கனா பதிலடி appeared first on Dinakaran.